web log free
March 29, 2024

சைரா நரசிம்மா ரெட்டி

முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு முன்னதாக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய ஒரு சிற்றரசனின் கதையே 'சைரா நரசிம்மா ரெட்டி'.

ஆந்திராவில் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி (சிரஞ்சீவி) ஒரு சிற்றரசராக ஆட்சி செய்து வந்தார். ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் வளங்களைக் கண்டு அடிமைப்படுத்திய நிலையில் சிற்றரசருக்கான அதிகாரம் இல்லாவிட்டாலும் அவரை அரசராகவே பாவித்து மக்கள் வணங்கியும் மரியாதையும் செலுத்தியும் வருகின்றனர். வறட்சி, பசி, பட்டினியில் தவிக்கும் மக்களிடம் ஆங்கிலேயர்கள் வரிகட்டச் சொல்லி வற்புறுத்த, அதை எதிர்த்து ஆங்கிலேயர்களின் பகையை சம்பாதிக்கிறார் நரசிம்மா ரெட்டி. இதனால் அடுத்தடுத்து அவரை ஆங்கிலேயப் படைகள் குறி வைக்கின்றன.

 

ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வெல்லும் நோக்கில் தன்னுடன் இருக்கும் 60க்கும் மேற்பட்ட சிற்றரசர்களை இணைக்கும் முயற்சியில் நரசிம்மா ரெட்டி ஈடுபடுகிறார். மக்கள் கூட்டத்துக்குப் பிறகு சிற்றரசர்கள் நரசிம்மா ரெட்டியுடன் இணைந்து ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் போராடுகின்றனர். இதனிடையே நடக்கும் துரோகத்தால் நரசிம்மா ரெட்டியை ஆங்கிலேயப் படை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துகிறது.

அதற்குப் பிறகு நரசிம்மா ரெட்டி என்ன ஆகிறார், அவரின் வீர உணர்வும் சுதந்திர வேட்கையும் என்ன ஆனது, நரசிம்மா ரெட்டிக்கு யாரால் துரோகம் நிகழ்ந்தது? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

'பாகுபலி'க்குப் பிறகு தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. சரித்திரப் பின்னணியை மையமாகக் கொண்ட படத்தை இயக்கியுள்ளார் சுரேந்தர் ரெட்டி. இது அவருக்கு 9-வது படம். 8 படங்களை இயக்கிய அனுபவமும் தொழில்நுட்பக் கலைஞர்களிடம் வேலை வாங்கிய விதமும் அவரின் ஆளுமைக்கான சான்றாக இப்படத்துக்குக் கை கொடுத்துள்ளது.

1857-ல் இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற நிலையில், அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆந்திராவின் குட்டலூருவில் ஆங்கிலேயப் படையை எதிர்த்து நின்று போரிட்டவர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி. சுதந்திரப் போராட்டத்துக்கான தீயை வளர்த்த பெரு நெருப்பு என்று வரலாறு அவரைக் குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட நரசிம்மா ரெட்டியை ஆங்கிலேயப் படை கைது செய்து பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட்டது. அவரது தலையை சுமார் 30 வருடங்கள் வரை அகற்றாமல் கோட்டையின் முகப்பில் வைத்திருந்தது. போராட்டத்தில் குதிக்கும் மக்களை அச்சுறுத்துவதற்காகவே ஆங்கிலேயர்கள் இப்படிச் செய்தனர்.