Print this page

திருட்டுப் பாலில் சிம்புவின் உருவப்படத்திற்குப் பால் அபிஷேகம்

பால் பொட்டலங்களைத் திருடி நடிகர் சிம்புவின் உருவப்படங்களுக்கு அவரது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்துள்ளதாக தமிழ்நாட்டுப் பால் விநியோக ஊழியர் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்காக ரசிகர்கள் சுமார் 10,000 லிட்டர் பாலைத் திருடியுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இரண்டு நாட்களில் அந்தப் பால் பொட்டலங்கள் களவாடப்பட்டதாகவும் சுட்டிக்கதட்டப்பட்டுள்ளது.

அண்மையில் நடிகர் சிம்பு தனது புதிய படத்துக்கான சுவரொட்டி மீது ரசிகர்கள் பாலைத் தெளிக்காமல் அண்டாக் கணக்கில் பாலைக் கொட்டி அபிஷேகம் செய்யுமாறு காணொளிச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பால் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவில், அதுவும் குறிப்பாகத் தமிழகத்தில் இதுபோல் தங்கள் மனங்கவர்ந்த திரை நடிகர்களின் புதிய திரைப்படம் வெளியிடப்படும்போது அவர்களின் உருவப்படங்கள் (கட் அவுட்) மீதும், படச் சுவரொட்டிகள் மீதும் பாலாபிஷேகம் செய்யப்படுவது வழக்கமானது.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும்போது இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடப்பதாகத் தமிழகப் பால் விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.