நான் சண்டை பிடிப்பேன், ஆனால் சமாதானம் ஆகிவிடுவார். வெளியில் செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எனக்கு பரிசு பொருட்களை வாங்கிவருவார். வீட்டிலுள்ள அத்தனை வேளைகளையும் செய்துவிடுவார் என தெரிவித்துள்ள மனைவி ஒருவர், கணவனின் அளவு கடந்த அன்பு, காதல், பாசத்தால், அவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ள விவகாரம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
குடும்ப சண்டை, சந்தேகம், கணவனின் நடத்தையில் சந்தேகம், மது அருந்துதல், குழந்தை பாக்கியம் இன்மை ஆகிய காரணங்களால் பல குடும்பங்கள் பிரிந்துள்ளன. சில குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. இன்னும் சில குடும்ப விவகாரங்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
ஆனால், அளவு கடந்த அன்பே, குடும்பத்தை பிரிக்கவேண்டும் என்பதற்கு காரணமாக அமைந்துவிடப்போகிறது என்றால் நினைத்துக்கூட பார்க்கமுடியாதுள்ளது.
இந்த விசித்தரமான வழக்கு தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஃபுஜைரா என்ற நீதிமன்றத்தில் இந்த வழக்கு, குடும்பப் பெண்ணொருவரினால் தாக்கல் செய்யப்பட்டது.
கணவனிடமிருந்து தான் பிரிய வேண்டும். அளவுக்கடந்த அன்பினால் தான் பிரியவேண்டும் வழக்குத் தாக்கல் செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
தன்னுடைய திருமண வாழ்க்கையில் ஒரு நாளேனும், தன்னுடைய கணவன் தன்னை ஏசியது இல்லை. இதனால், தானும், தன்னுடைய கணவனும், மன சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம்.
எது எப்படியாக இருந்தாலும் கணவனுடன் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு நான் பல தடவைகள் முயற்சித்துள்ளேன். அவ்வாறான ஒவ்வொரு சந்தரப்பங்களிலும் தனக்கு மன்னிப்பு கிடைக்கும். தன்னுடைய தவற்றை ஏற்றுக்கொள்ளும் அவர், தான் தோல்வியடைந்துவிட்டதாக தெரிவிப்பார்.
தன்னை, எந்தவொரு வேலையையும் செய்வதற்கு கணவன் இடமளிக்கமாட்டார். வீட்டு வேலைகளை அனைத்தையும் கணவனே செய்துவிடுவார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். வீட்டுக்கு வெளியே செல்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தனக்கு பரிசுப்பொருட்களை வாங்கிவருவார்.
பரிசு வாங்குவதை மறக்கமாட்டார். ஆகையால், விவாகரத்து கோரியதாக அந்தப் பெண், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சினையை சந்திக்காமையால், தான் பல்வேறான துன்பங்களை சந்தித்துள்ளேன், மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளேன், ஆகையால், விவாகரத்தை வழங்கவேண்டும் எனக் கேட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அந்தப் பெண்ணின் கணவன், தன்னுடைய மனைவின் மீது அளவுக்கடந்த பாசத்தை கொண்டிருப்பதால், எதுவும் சொல்வதற்கு இல்லை என்றார்.
தன்னால் நிறைவேற்றக் கூடிய பொறுப்பை தான் செய்துள்ளேன். அதற்காக அர்ப்பணித்துள்ளேன் என்றும் அந்தக் கணவன், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வழக்கை, வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு தன்னுடைய மனைவியிடம் கணவன், நீதிமன்றத்தில் வைத்தே கேட்டுக்கொண்டார்.
இருவரின் கருத்துகளையும் கேட்டுக்கொண்ட ஃபுஜைரா நீதிமன்றம், இருவரையும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருவதற்கு, அனுமதியளித்துள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மேற்படி வழக்கையும் திகதி குறிப்பிடாமல் ஃபுஜைரா நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.