web log free
April 20, 2024

'விராட்கோலியை மாத்திரம் நம்பியிருக்கவில்லை'

இந்திய அணி விராட்கோலியை மாத்திரம் நம்பியிருக்கவில்லை என, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

உலக கிண்ண போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி தெரிவு குறித்து தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி முதல்முறையாக கருத்து வெளியிடுகையில் இதனைக் கூறியுள்ளார்.

அணி தேர்வில் தான் தலையிடுவது கிடையாது என்றும் அணி தேர்வு தொடர்பாக ஏதாவது ஆலோசனை இருந்தால் அணித்தலைவர் ஊடாக தெரியப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக கிண்ண போட்டிக்கு 15 வீரர்களை மாத்திரமே தெரிவு செய்ய முடியும் என்பதால் ஒரு சில வீரர்கள் தவிர்க்க முடியாமல் விடுபட்டு போவார்கள் என்றும் இது முற்றிலும் எதிர்பாராததாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அணிக்கு தெரிவாகாத வீரர்கள் மனவேதனை அடையக்கூடாது என்று தெரிவித்த ரவிசாஸ்திரி, வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் வாய்ப்பை இழந்த வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் அணிக்கு அழைக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அணியின் செயல்பாடுகளை பார்த்தால் அனைத்துவிதமான போட்டியகளிலும் இந்திய அணி முதல் 3 இடங்களிலேயே உள்ளதாக சுட்டிக்காட்டிய ரவிசாஸ்திரி, இதன் மூலம் இந்திய அணி விராட்கோலி போன்ற குறிப்பிட்ட ஒரு வீரரையே நம்பி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.