web log free
April 26, 2024
kumar

kumar

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீடுக்கு விண்ணப்பிக்கும் போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போதும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்குச் செல்லாமல் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.  

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளும் கட்சியின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (29) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கலந்துரையாடலின் பின்னர் அதன் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பதவிகளுக்காக காத்திருக்கும் கட்சியல்ல என்று கூறினார். 

கடந்த 18ஆம் திகதி டுபாயில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சீன பிரஜைகள் இருவர் மற்றும் எகிப்திய பிரஜை ஒருவரும் இந்த நாட்டில் முதலீடு செய்ய வரும் வர்த்தகர்கள் என கூறி வந்துள்ளனர்.

இவர்களில் இருந்த லி பான் என்ற சீன நாட்டவர், ஆப்பிரிக்க நாடான கினியாவின் வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்கியதால் சர்ச்சைக்குரிய சூழல் உருவானது.

சந்தேகத்திற்கு இடமான வகையில், அவரது மற்ற ஆவணங்களை சோதனையிட்ட குடிவரவு அதிகாரிகள், அவரிடம் சீன கடவுச்சீட்டையும் கண்டுபிடித்துள்ளனர்.

அங்கு சீன நபர் வன்முறையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, குறித்த நபரை நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு கோரி குடிவரவு குடியகழ்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

பின்னர், அந்த சீன பிரஜை நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்பு கிடைத்தது, ஆனால் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸின் உத்தரவின்படி, சீன பிரஜை குடிவரவு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

அந்த விசாரணைகளின் பின்னர் கடந்த 23ஆம் திகதி குறித்த சீன பிரஜையை இலங்கையில் இருந்து நாடு கடத்துமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், சீனாவுக்கு நாடு கடத்தப்படக் கூடாது என்று சீனப் பிரஜை தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட இருந்ததால், அவர் அன்று நாடு கடத்தப்படாமல், குடிவரவுத் திணைக்களத்தால் காவலில் வைக்கப்பட்டார்.

இந்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, லீ பே என்ற இந்த சீனப் பிரஜைக்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

இது போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தம்மை அடித்து காயப்படுத்தியதாக சீன பிரஜை தனது மனுவில் கூறியிருந்த நிலையில், அந்த காயங்கள் தானே ஏற்படுத்தியவை என சட்ட வைத்திய அதிகாரியிடம் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

தன்னை சீனாவுக்கு நாடு கடத்துவதை விட துபாய்க்கு நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் லீ பான் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

எனினும் மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, மனுவை வாபஸ் பெற அனுமதிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி, மனுவை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதேவேளை, லீ பானை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பில் இந்த நாட்டில் உள்ள சீன தூதரகத்துடன் கலந்துரையாடி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை கல்லூரி மாணவர்கள் மூவரை தாக்கிய ஆசிரியரை நேற்று (27) தெலிப்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தலைமுடியை வெட்டாமல் பாடசாலைக்கு வந்த மாணவர்களை ஆசிரியர் திட்டியுள்ளார்.

தாக்குதலின் காரணமாக மூன்று மாணவர்களின் வாயில் இருந்து இரத்தம் கசிந்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவருக்கு வலிப்பு நோயும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாணவர்களின் பெற்றோர்கள் யாழ்.பிராந்திய கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் மாணவர்களை மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் தினமும் அடிப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் பெற்றோரின் புகாரின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

இமதுவ அகுலுகஹா கல்குவாரிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள புத்தர் விகாரையின் கண்ணாடியை யாரோ உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை கவிழ்த்துள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படவில்லை என அப்பகுதியின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புத்தர் சிலை இருக்கையில் முகம் குப்புற விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் பலர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

புத்தர் விகாரையின் கண்ணாடியை உடைத்து புத்தர் சிலையை உடைத்தவர்கள் பற்றிய தகவல் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கவில்லை.

மகாவலி அதிகார சபையின் செயற்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கும் தமிழர்களை இன ரீதியாக இல்லாமல் செய்வதற்குமான இன அழிப்பின் நீண்ட கால தந்திரமான செயற்பாடு என்றும் இதை முழுமையாக கண்டிப்பதாகவும் முழுமையாக எதிர்ப்பதாகவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து ஞாயிற்றுக்கிழமை (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், 

“மகாவலி அதிகார சபையால் முல்லைத்தீவு, வவுனியா, மாவட்டங்களில் 1988 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் 14 கிராம அலுவலர் பிரிவுகள் அபகரிக்கப்பட்டு யுத்தத்தில் மக்கள் இடம் பெயர்ந்த போது முழுமையாக அங்கு சிங்கள குடியேற்றங்களை நிறுவி வெலி ஓயா என்ற ஒரு புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வடக்கு, கிழக்கை பிரிக்கின்ற நோக்கத்துக்காக இந்த மகாவலி அதிகார சபை புதிய ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கி பிற்பாடு கொக்கிளாய் முதல் செம்மலை வரை இருக்கின்ற 6 கிராம சேவகர் பிரிவுகளை அபகரிக்க முயற்சி எடுத்த போது எங்களுடைய தொடர் அழுத்தம் காரணமாக தற்காலிகமாக அந்த திட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது. 

மகாவலி என்பது தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களையும் சிங்கள இனப்பரம்பலையும் செய்வதற்காக அரசாங்கத்தால் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு செயல்பாடு.

அந்த வகையில் தற்பொழுது மகாவலி “J” வலயம் என்ற ஒன்றை புதிதாக உருவாக்குவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கும் 7 கிராம அலுவலர் பிரிவுகளும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் இருக்கின்ற 15 கிராம அலுவலர்கள் பிரிவுகளும் ,மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 15 கிராம அலுவலர் பிரிவுகளும் உள்ளடங்களாக மொத்தம் 37 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி மகாவலி அதிகார சபை புதிய வர்த்தமானி அறிவித்தல் செய்வதற்காக பிரதேச செயலகங்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.

இவ்விடயத்தை எதிர்த்து நான் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை முன் வைத்திருக்கிறேன். அதற்கு நீர்ப்பாசன அமைச்சர் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது பதில் அளிப்பதாக கூறியிருக்கிறார்.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் இந்த திட்டம் என்பது தமிழர்களுடைய இன பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை இங்கு கொண்டுவருவதற்கும் தமிழர்களை இனரீதியாக இல்லாமல் செய்வதற்கு இன அழிப்பின் ஒரு நீண்ட கால தந்திரமான செயல்பாடுதான் இந்த மகாவலி அதிகார சபையின் செயல்பாடு.

 இதை முழுமையாக நாங்கள் கண்டிக்கின்றோம். முழுமையாக எதிர்க்கின்றோம். இதை நடைமுறைப்படுத்த விடாமல் செய்வதற்கு பல முயற்சி செய்துள்ளேன். பாராளுமன்றத்தில் பிரேரணையை முன் வைத்துள்ளேன். அதையும் மீறி ஜனாதிபதியை சந்திப்பதற்காக நான் அனுமதி கேட்டிருக்கின்றேன். அவரிடம் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்துவேன்” என்றார்.

 

மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் சடலம் மீதான முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் டி.ருவன்புர தெரிவித்துள்ளார்.

சடலம் தொடர்பான மேலதிக பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை குறித்த முழுமையான அறிக்கையை வெளியிடுவதற்கு இன்னும் 2 மாதங்கள் செல்லும் எனவும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கூறினார்.

முதற்கட்ட பரிசோதனை அறிக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் டி.ருவன்புர தெரிவித்தார்.

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உயிரிழப்பு தொடர்பில் தடயவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட சட்ட மருத்துவ அதிகாரிகளால், நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஷாப்டரின் சடலம் கடந்த 25 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டது.

பொரளை பொது மயானத்தில் தனது காரில் கை கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் மீட்கப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தினேஷ் ஷாப்டர் அன்றைய தினம் இரவு உயிரிழந்தார்.

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் பன்றிகளுக்கு வைரஸ் நோய் பரவி வருவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

பன்றிகளின் சுவாச மண்டலத்தில் ஏற்படும் இந்த வைரஸ் நோய் TRRS என்ற பெயரால் அறியப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்தார். 

இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பன்றிகள் உயிரிழப்பதாகவும் நோய்க்கான தடுப்பூசிகளை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹேமலி கொத்தலாவல குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் அபாயம் இல்லை என அவர் கூறினார். 

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் அண்மையில் மாடுகளுக்கிடையே Lumpy skin disease எனப்படும் தோல் கழலை நோய் பரவியமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் செய்தி வௌியிட்டிருந்தது. 

இந்த நிலையில், தற்போது குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் Lumpy skin disease அறிகுறிகளுடன் காணப்படுவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

குருநாகல் மாவட்டத்தின் ஹொரம்பாவ, நாரம்மல, கெக்குணகொல்ல, மெட்டியாவ, மிதியால, பண்டாரகொஸ்வத்த, பரகஹகொட்டுவ உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளிடையே தோல் கழலை நோய் பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. 

குறித்த நோய்த் தாக்கத்தினால் குறித்த பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான டக்ளஸ் நாணயக்காரவை நியமிக்க அரசியலமைப்புச் சபைக்கு பரிந்துரைக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாணயக்கார தற்போது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சபை உறுப்பினராக பணியாற்றுகிறார்.

1983 ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட இவர் அரச சேவையில் பல உயர் பதவிகளை வகித்தார்.

அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சின் செயலாளர் போன்ற உயர் பதவிகளை வகித்து ஓய்வுபெற்ற அவர், கடந்த ஜூலை மாதம் முதல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவை பாராளுமன்றம் நீக்கியதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு டக்ளஸ் நாணயக்கார நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேபினட் அமைச்சர்கள் தங்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் பொறுப்புகளை தங்கள் ராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்காததால் பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில அமைச்சர்களுக்கு இரண்டு, மூன்று அமைச்சுக்கள் என பத்து பதினைந்து நிறுவனங்கள் இருந்தாலும், ஓரிரு சிறு நிறுவனங்களைத் தவிர, இராஜாங்க அமைச்சர்களுக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அமைச்சுக்களுக்குச் சென்று சும்மா வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பல இராஜாங்க அமைச்சர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அமைச்சுக்களில் பொறுப்புகள் வழங்கப்படாமையால் சில அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் கருத்து மோதல்களும் உருவாகியுள்ளதாக அறியமுடிகின்றது.

20 கேபினட் அமைச்சர்களும், 38 மாநில அமைச்சர்களும் உள்ளனர்.

முப்பத்தெட்டு இராஜாங்க அமைச்சர்களில் மிகச் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அமைச்சுக்களில் குறிப்பிட்ட பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்பது தெரிந்ததே.

இவர்களில் சுமார் 20 பேர் அரசாங்க அமைச்சுக்களை விட்டு விலகுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.