ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று (12) தெரிவித்தார்.
புதிய அமைச்சரவையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானம் எடுத்துள்ளதாகக் கூறப்படும் விடயத்திற்கு கொழும்பு பேராயர் கொழும்பில் செய்தியாளர்களிடம் அதிருப்தி வௌியிட்டார்.விக்ரமசிங்க பாராளுமன்றத்தின் ஒரு பிரதிநிதி மட்டுமே, அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. இந்த நியமனம் சட்டப்பூர்வமானது அல்ல, தற்போது இந்த நாட்டில் உள்ள மக்கள் விரும்பும் தீர்வு இதுவல்ல
என்றும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.
அரசியலில் தோற்கடிக்கப்பட்ட, மக்களால் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு நபரை அல்ல, மரியாதைக்குரிய நேர்மையான நபரையே மக்கள் விரும்புகிறார்கள் எனவும் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
அனைத்து மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய ஒரு நபரையே மக்கள் விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மகாநாயக்க தேரர்கள் கட்சி சார்பற்ற நபரை பரிந்துரைக்கின்றனர். அந்த பரிந்துரைக்கு என்னவானது என்பது அனைவரின் யூகமாக உள்ளது. தற்போதைய நெருக்கடியிலிருந்து எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் முன்னேறுவது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம், இந்த அமைப்பில் முழுமையான மாற்றம் தேவை. அது தற்போதைய பாராளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் மூலம் நடக்க முடியாது. இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய ஒரு பக்கசார்பற்ற நபரால் மட்டுமே அது நிகழ முடியும்
என்றும் மால்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேலும் குறிப்பிட்டார். ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பு விழாவை இரத்து செய்ய வேண்டும் எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார். கலாநிதி ஓமல்பே சோபித்த தேரருடன் கொழும்பில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை கூறினார்.
புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவின் மூலம் மஹிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துள்ளார்.
”நெருக்கடியான தருணத்தில் பயணத்தை தொடரும் உங்களுக்கு வாழ்த்துகள்,” என முன்னார் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.
இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் ஐந்து தடவைகள் பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் படுகொலையின் பின்னர் 1993 – 1994 வரை அவர் முதலில் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 2001 முதல் 2004 வரை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை வழிநடத்த பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.
ஜனவரி 2015 இல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தலில் அவர் கூட்டணி அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அவரது நியமனம் ஆகஸ்ட் 2015 பொதுத்தேர்தலில் இலங்கை மக்களால் அங்கீகரிக்கப்பட்டது.
2018 ஒக்டோபரில் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கிய அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு, மிண்டும் 2018 டிசம்பரில் அவரை பிரதமராக நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நவம்பர் 2019 இல், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தோல்வியடைந்ததை அடுத்து, அவர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.
அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று(12) காலை 07 மணியுடன் நிறைவுக்கு வந்தது.
‘குண்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும், கோட்டாபய வீட்டிற்கு செல்ல வேண்டும்’ எனும் பெயரில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சுகாதாரம், துறைமுகம், மின்சாரம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள், இந்தப் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்றதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பொதுநிர்வாக அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பும் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களில் கடமையாற்றிய செயலாளர்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக மக்களின் வாழ்வாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக ஜனாதிபதியினால் நேற்று முதல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், கே.எம். நிதி அமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்
ஊரடங்கு சட்டம் நாளை காலை 07 மணிக்கு தளர்த்தப்பட்டு நாளை பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.
வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி காலை 06 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனித்து செயல்பட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
நாடு தற்போது உள்ள நிலைமையில் அரசாங்கம் ஒன்று அவசியம் எனவும் அவ்வாறு அரசாங்கத்தை அமைக்கும் தரப்பிற்கு ஆதரவு வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சஜித் பிரேமதாஸவை பிரதமர் பதவியை ஏற்று ஆட்சி அமைக்குமாறு ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தி வருகின்றார்.
எனினும் சஜித் பிரேமதாச அதற்கு மறுப்பு தெரிவித்து வருவதால் தனித்து செயல்பட ஹரின் முடிவு செய்துள்ளார்.
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது உள்ளிட்ட அதிகபட்ச சட்டப்பூர்வ அதிகாரங்களைப் பயன்படுத்த அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுக்கடங்காத கும்பல் அல்லது வன்முறைக் குழுக்களால் வாகன சோதனைகள் மற்றும் பொது அல்லது தனியார் சொத்துக்களை சேதப்படுத்துதல், கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நாட்டில் காணப்படும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஸ்திர தன்மையை உருவாக்கும் நோக்கில் பிரதமர் பதவியை பொறுப்பேற்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க இன்னும் ஓரிரு தினங்களில் பிரதமராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்கவிற்கு மைத்திரி அணியும் விமல், சம்பிக்க அணியும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் சஜித் அணியின் ஒரு பிரிவு ரணிலுடன் இணையும் என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவிற்கு கோரிக்கையை முன்வைத்த போதும் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக வைத்துக்கொண்டு பிரதமர் பதவியை பொறுப்பேற்க முடியாது என சஜித் பிரேமதாச திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
இதனால் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித்தை கைவிட்டு ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் தற்போது விசேட சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி இன்று இரவு விசேட உரை ஒன்றை ஆற்ற உள்ள நிலையில் ஆட்சி மாற்றம் ஒன்று தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.