சர்வக்கட்சி அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன், நாமல், பவித்ரா, சந்திரசேன, ரோஹித, லன்சா மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கவுள்ளது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா, சிவநேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் சி.வி.விக்கினேஷ்வரன் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து அமைக்கப்படும் சர்வக்கட்சி அரசாங்கத்தின் வியூகம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அரசியல் கட்சிகளுக்குமிடையிலான விசேட சந்திப்பு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி,ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகளுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு கடந்த நாட்களில் இடம்பெற்றன. மக்கள் விடுதலை முன்னணிக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் பிரதமருக்கும், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இச்சந்திப்பில் சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் விரிவுப்படுத்தப்பட்ட வகையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கபபட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பிரனாந்து, நாமல் ராஜபக்ஷ, எஸ்.எம்.சந்திரசேன, பவித்ரா வன்னியராட்சி, ரோஹித அபேகுணவர்தன, நிமல் லன்ஷா மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க ஜனாதிபதியிடம் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா,பிள்ளையான் மற்றும் சி.வி.விக்கினேஷ்வரன் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சு பதவிகள் வரையறுக்கப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் குறிப்பிடுகின்றன நிலையில் அக்கட்சியில் சுமார் 08 பேரின் பெயர் அமைச்சரவை அமைச்சுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சிசிர ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கத்தில் 30 அமைச்சரவை அமைச்சுக்கள், 30 இராஜாங்க அமைச்சுக்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை நிர்வகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தற்போதைய நிலைவரத்தின் பிரகாரம் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் சாத்தியம் காணப்படுகிறது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சீனாவின் எக்சிம் வங்கியிடமிருந்து பணம் விடுவிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக குறித்த திட்டம் தொடர்பில் அரசாங்கம் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதை இடைநிறுத்த இலங்கை தீர்மானித்திருப்பதும் சீனாவின் தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடவத்தைக்கும் மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீன பிரஜைகள் வெளியேறத் தொடங்கியுள்ளனர், இதனால் உள்ளூர்வாசிகளின் சுமார் 2000 வேலைகள் ஆபத்தில் உள்ளன
திட்டத்தின் கட்டுமானம் செப்டம்பர் 2020 இல் தொடங்கியது மற்றும் 2024 இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சுமார் 33 பில்லியன் ரூபா மூலம் இதுவரை சுமார் 32 வீதமான வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் சிலாவத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கஜுவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் கட்டப்பட்டிருந்த சிலையை சிலர் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர்வாசிகள் குழுவினர் பிரார்த்தனைக்காக சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் சென்றபோது, அது கட்டப்பட்ட இடத்தில் சேதம் அடைந்ததைக் கண்டு பொலிசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
பழமையான தேவாலயமான கிறிஸ்தவ தேவாலயத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும், பழமையான தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் கவசம் மாத்திரமே சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் மன்னாரில் பல இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட விகாரைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது இதுவரை வெளியாகவில்லை.
மேலும், இந்த தாக்குதல்களை நடத்தும் நபர்களை கண்டறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலாவத்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சீனாவின் ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 கப்பலுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்துடன், இது குறித்து கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 எதிர்வரும் 11ம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது பிராந்தியத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்த கப்பல் செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை கண்காணிப்பு திறன்களைக் கொண்டிருப்பதால் சீனக் கப்பலுக்கு இலங்கையில் தரித்து நிற்க அனுமதி வழங்கப்படுவதற்கு இந்தியா கடும் கவலைகளையும் எதிர்ப்பையும் வெளியிட்டது.
சீனக் கப்பல் தொடர்பான இராஜதந்திர முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது.
இதன் ஒரு பகுதியாக ஜனாதிபதிக்கும் இலங்கையில் உள்ள இந்திய மற்றும் சீனத் தூதுவர்களுக்கும் இடையில் பல உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்போடியாவில் நடைபெறவுள்ள ஆசியான் உச்சி மாநாட்டையொட்டி, சீனக் கப்பல் தொடர்பான பிரச்சினை குறித்து இந்திய மற்றும் சீன சகாக்களுடன் கலந்துரையாடுமாறும் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், வெளியுறவு அமைச்சரின் முயற்சிகள் இருந்தபோதிலும், பிரச்சினை தீர்க்கப்படவில்லை, கப்பலுக்கான பாதையை மாற்றுவது குறித்து பரிசீலிக்க சீனத் தலைவர்கள் உடன்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சந்திப்பின் முடிவுகளை ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் தெரிவித்தபோது, யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்வதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வரும் திகதி இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனை நடத்தப்படும் வரை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த விடயம் தொடர்பில், கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் Qi Zhenhong, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனக் கப்பலுக்கான அனுமதியை இரத்துச் செய்யும் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து சீனத் தூதுவர் சீனாவின் கவலையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிலாபத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை: சிலாபத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.
எனவே மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டுக்கு டொலர்களை தேடும் திட்டத்துக்காக தான் ஹெலிகொப்டரில் வடக்கிற்கு சென்றதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் 4000 பேருக்கு சதொச வவுச்சர் வழங்கும் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹெலிகாப்டரில் ஏன் வடக்கே சென்றீர்கள் என்று ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, கருணாநாயக்க, "நான் ஏன் போக முடியாது? நான் அரசாங்கத்தில் இல்லை. அதனால் நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன். முதலீட்டாளர்களுடன் சென்று டொலர்களை சேகரிக்க முயற்சிக்கும்போது, " நாடு, நான் அவர்களை பாசாங்குத்தனமாக பார்க்கிறேன், இதை ஊடகங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தில் பதவி ஏற்பீர்களா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரவி கருணாநாயக்க, தேவை பதவிகள் அல்ல மக்களுக்கு உதவுவதே என்றார்.
சர்வகட்சி ஆட்சி அமைவதில் அமைச்சர் பதவிக்கு பெரும் போட்டி நிலவுவதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட பல அரசியல் கட்சிகள் தமது கட்சிகளுக்கு எத்தனை அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே கலந்துரையாடி வருகின்றன.
ஆனால் பல தரப்பினரால் கோரிய தொகைகள் தொடர்பில் சாதகமான பதில் எதுவும் கிடைக்காததால் சில தரப்பினர் கவலையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமையின் அடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பகிர்வதில் ஏற்கனவே சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 11 ஆம் திகதி வியாழக்கிழமை பொது விடுமுறையாக இருப்பதால், ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமை மாத்திரம் பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வௌ்ளிக்கிழமை வீட்டிலிருந்து கற்பதற்கான செயற்பாடுகளை வழங்கியோ அல்லது இணைய வழி கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கவோ முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றினூடாக கல்வி அமைச்சு இதை வெளியிட்டுள்ளது.
எனினும், போக்குவரத்து பிரச்சினை இல்லாத பாடசாலைகளில் மாத்திரம் அதிபர், ஆசிரியர்களின் இணக்கப்பாட்டுடன், வலயக் கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன், வௌ்ளிக்கிழமைகளிலும் பாடசாலைகளை திறக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தலைவர்கள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக புலனாய்வு அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
பல தடவைகள் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் சந்தேகத்திற்கிடமான 31 பேரின் வெளிநாட்டு பயணத்திற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
இவ்வாறான மேலும் பல நபர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றதுடன், அவர்களை வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் அழகு கலை நிலையமொன்றில் இருந்த போது அங்கு வந்த துப்பாக்கிதாரி இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.