web log free
September 08, 2024
kumar

kumar

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணை இடம்பெறாமை உள்ளிட்ட செயற்பாடுகளின் பின்புலத்தில், நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் பெற்றுக்கொண்ட நட்சத்திர அதிகாரம் பொருந்தியவரா இருக்கின்றார் என்ற சந்தேகம் எழுவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது பேராயர் இதனை தெரிவித்தார்.

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நேரமான காலை 8.45-இற்கு பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஆராதனை இடம்பெற்றது.

சர்வ மதத் தலைவர்கள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் சிலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து திருப்தியடைய முடியாது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று மீண்டும் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தாக்குதலின் பின்புலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அப்பால் சென்ற பாரிய சதித்திட்டம் ஒன்று இருப்பதாகவும் பேராயர் குறிப்பிட்டார்.

ஒருதலைப்பட்சமாக ஒரு சில விடயங்களை மறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியை நிராகரிப்பதாகவும் கர்தினால் ஆண்டகை வலியுறுத்தினார்.

இதனிடையே, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் விதமாக மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

சியோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில் இந்த விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

இலங்கை மக்கள் சகலரினதும் நலன்களை கருத்திற்கொண்டு 24 மணிநேரமும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் இலங்கை இராணுவம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் பொதுமக்களிடம் வீதி மறியல்களை ஏற்படுத்த வேண்டாமென கோரிக்கை விடுக்கிறது.

அதற்கமைய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் நேற்று (21) மதியம் விடுக்கப்பட்ட விஷேட அறிக்கையில், கொவிட் - 19 நோய்ப் பரவல் உக்கிரமடைந்திருந்த போதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் போதும் பொதுமக்களால் படையினருக்கு வழங்கப்பட்ட ஆதரவு தொடர்பில் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்ற மக்கள் அமைதியான முறையில் போராட்டங்களுக்கு மத்தியில் அவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் எரிபொருள் விநியோகம் மற்றும் பொது மக்களின் போக்குவரத்துச் செயற்பாடுகளுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகச் செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் முயற்சிகள் சில தரப்புக்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதனால் பொலிஸ்மா அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க போக்குவரத்துச் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக இராணுவம் மற்றும் ஏனைய படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் புதன்கிழமை (20) பொது மக்கள் சிலர் தாமாகவே முன்வந்து வீதித்தடைகளை அகற்றுவதையும் அவதானிக்க முடிந்ததையிட்டு அதற்காக பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் எனவும் தெரிவித்தார்.

அதனால் அண்மையில் ஏற்பட்ட கொவிட் – 19 தொற்றுநோய் பரவல் உக்கிரமடைந்திருந்த வேளையில் படையினருக்கும் பொலிஸாருக்கும் வழங்கிய ஒத்துழைப்புக்களை போன்றே தற்போதைய நெருக்கடியின் போதும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கிறோம்.

அதனால் வீதி மறியல்களை தவிர்த்து பொது மக்களுக்கு அவசியமான அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்துச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக முழுமையான ஆதரவினை வழங்குமாறும் கேட்டுக்கொள்வதாக இராணுவத்தளபதி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு இன்று (21) பிற்பகல் பாராளுமன்ற குழு அறை இலக்கம் 1 இல் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் அதனை வலுவாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் முன்மொழிந்தார்.

அந்த முன்மொழிவிற்கு அனைத்து உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி ஏகமனதாக ஆதரவளித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் யூ.கே.சுமித் முன்மொழிவை உறுதிசெய்தார்.

எதிர்வரும் வாரங்களில் மக்களுக்கு தேவையான துரித நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.

ஒருசில வாரங்களுக்குள் எரிபொருள் மற்றும் மின்தடை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக இதன்போது கருத்து தெரிவித்த வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அதேபோன்று எரிவாயு (கேஸ்) பிரச்சினையையும் ஒருசில வாரங்களுக்குள் தீர்க்க முடியும் என கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரன இதன்போது குறிப்பிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து வெளியேறி பெற்றுக்கொடுத்த ஆதரவிற்கு கட்சியின் சகல உறுப்பினர்களும் நன்றிகளை தெரிவித்தனர். புதிய அமைச்சர்கள் எதிர்கால நடவடிக்கைகளை வலுவாக முன்னெடுத்து செல்வதற்கு தேவையான ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதாக உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

அரசாங்கத்தை சீர்குலைக்கும் பொய்ப் பிரசாரங்களின் மூலம் அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சில குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் அரசாங்கத்தை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் எனவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் நம்பிக்கை வெளியிட்டனர்.

அரசாங்கத்தை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் எனவும் உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

" மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும்."  

- இவ்வாறு இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார பெண் ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார். 

அத்துடன், ராஜபக்ச குடும்பமும் அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் எனவும் அவர் இடித்துரைத்தார்.

" நான் குடும்ப அரசியலுக்கு எதிரானவள், குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் இல்லாத சூழ்நிலையில்தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன். அம்மா (ஶ்ரீமாவும்) அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என்ற உறுதிமொழியை எனக்கு வழங்கியிருந்தார். குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு என்பதால்தான் மகனைகூட அரசியலில் இறக்கவில்லை." - எனவும் சந்திரிக்கா தெரிவித்தார்.

 

நிறைவேற்று அதிகாரங்களை நீக்கிவிட்டு, நாடாளுமன்றத்தை மீண்டும் அதிகாரமளிக்கும் வகையில் அரசியலமைப்பின் 19வது திருத்தம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக ஆளும் கட்சி எம்.பி.க்கள் மத்தியில் பாரிய அரசியல் ஸ்திரமின்மை நிலவி வருவதாகவும், தற்போது அமர்ந்துள்ள 11 எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர்களில் பலர் கோரி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியில்.

பதவி விலகல் இருந்தால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வேறு சிலர் கூறுகின்றனர்.

அண்மைய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அனைவரும் ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் எனவும், பிரதமருடன் எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்கவில்லை. அமைச்சரவையில் பல மூத்த அமைச்சர்களை இணைத்துக் கொள்ளுமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார், ஆனால் ஜனாதிபதி எதிர்ப்பாளர்களை அமைதிப்படுத்தி நாட்டை இளம் மற்றும் புதிய அமைச்சரவைக்கு மீட்டெடுப்பார் என நம்புவதாகக் கூறினார்.

இதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்க பிரதமர் தயாராகி வருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் இரண்டு நாள் கலந்துரையாடலையும் முன்மொழிந்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் பதவி விலகல் குறித்த பிரேரணைகள் தொடர்பில் இன்றும் நாளையும் கட்சித் தலைவர்கள் கூடி கலந்துரையாடவுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

சபாநாயகர் வெள்ளிக்கிழமைக்குள் ஜனாதிபதிக்கு அறிவிப்பார், ஜனாதிபதி பதவி விலகுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்று சுதந்திரமாக செயற்படுவோம் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

தமது தீர்மானத்தை எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள அவர்கள், இடைக்கால அரசாங்கத்தை அமைத்து பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்கும் பணி தற்போது மிகவும் அவசரமான பணி எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமைச்சுப் பதவிகள் உரிய முறையில் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டி புதிய அமைச்சரவைக்கு அக்குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குழுவினர் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட கலந்துரையாடலொன்றையும் நடத்த உள்ளனர்.

இந்த பதின்மூன்று எம்.பி.க்களும் சுயேச்சையாகி எதிர்க்கட்சியில் அமர்ந்தால், அரசு பெரும்பான்மையை இழக்கும் என்பது உறுதி.

கடந்த அரசாங்கத்தில் இருந்து 41 பேர் ராஜினாமா செய்ததுடன், மேலும் மூவர் நேற்று பதவி விலகியுள்ளனர்.

இந்த 13 பேரும் வெளியேறினால், அரசிலிருந்து வெளியேறும் மொத்த எண்ணிக்கை 57 ஆக உயரும்.

 

ரத்துபஸ்வெலயில் நீருக்கான போராட்டத்தை வழிநடத்திய தெரிபெஹே சிறிதம்ம தேரர் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இதேவேளை, ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபரை நினைவுகூர்ந்து காலிமுகத்திடலில் போராட்டமொன்று இடம்பெற்றது.

அத்துடன், உயிரிழந்த நபருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரி நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகைத்தரும் மக்கள் காலி முகத்திடலில் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சட்ட உதவிகள் மற்றும் சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக சட்டத்தரணிகள் பலரின் பங்குபற்றலுடன் விசேட வேலைத்திட்டம் போராட்ட களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் போராட்ட களத்தில் இடம்பெற்றது.

இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்று பிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேகாலை - றம்புக்கணை பகுதியில் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 13 பொதுமக்களும், 20 போலீஸாரும் அடங்குவதாக சிரேஷ்ட போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

காயமடைந்தவர்கள் கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் குறித்த குழு, பலரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துக்கொள்ளவுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள சிசிடிவி காணொளிகள், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளிகள், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான சாட்சியங்களின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

மரண பரிசோதனைகள் இடம்பெற்றதன் பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதி போலீஸ் மாஅதிபர் கூறுகின்றார்.

 

என்ன நடந்தது?

இலங்கையில் எரிபொருள் விலை நேற்று முன்தினம் இரவு முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், றம்புக்கணை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட எரிபொருளை, பழைய விலைக்கு விநியோகிக்குமாறு வலியுறுத்தி, நேற்று (19) அதிகாலை 1 மணி முதல் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது, நேற்று மாலை வரை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

றம்புக்கணை பகுதியை ஊடறுத்து செல்லும் ரயில் மார்க்கத்தை மறித்து, மக்கள் இந்த போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

குறித்த பகுதியிலிருந்து வெளியேறுமாறு போலீஸார், போராட்டக்காரர்களுக்கு கோரியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகைத் தந்த எரிபொருள் கொள்கலன் (பவுசர்) ஒன்றை பொதுமக்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில், எரிபொருள் கொள்கலனை எரியூட்ட, போராட்டக்காரர்கள் முயற்சித்துள்ளதாக பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கூறுகின்றார்.

இதன்போது கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டதுடன், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வராமையினால், குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எரிபொருள் கொள்கலன் எரியூட்டப்பட்டிருக்கும் பட்சத்தில், றம்புக்கணை பகுதியே தீக்கிரையாகியிருக்கும் என அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

அதனால், ஏற்படவிருந்த சேதங்களை குறைக்கும் நோக்கிலேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 42 வயதான கே.டி. லக்ஷான் உயிரிழந்துள்ளார்.

 

உறவினர்கள் கண்ணீர்

பின்னவல பகுதியிலுள்ள யானைகள் சரணாலயத்தில் யானைகளுக்கு உணவு வழங்கும் தொழிலையே, உயிரிழந்த நபர் செய்து வந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டிற்காகவும், இனத்திற்காகவுமே தனது மருமகன் போராடியதாக உயிரிழந்த நபரின் மனைவியின் தாயார்   தெரிவித்தார்.

''நேற்று காலை சென்றார். பின்னர் வந்தார். அங்கு தான் சென்றார் என எமக்கு தெரியும். மீண்டும் மாலை பெட்ரோல் நிரப்ப செல்வதாக கூறி சென்றார். ஆனால் அங்கு தான் சென்றார் என எமக்கு தெரியும். எமக்கு பொய் சொல்லி விட்டு, அங்கு தான் சென்றார். நாடு, இனம் என்பதற்காக செல்ல வேண்டும் என கூறினார். பெட்ரோல் நிரப்பி வருகின்றேன் என கூறியே சென்றார். சென்ற வேளையிலேயே இது நடந்துள்ளது. உயிரிழப்பதற்கே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்."

உயிரிழந்த கே.டி.லக்ஷானுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

"இந்த இருவரையும் எப்படி பாடசாலைக்கு அனுப்புவது. பாடசாலைக்கு சீருடை வாங்கு தருமாறு மகன் கூறினார். அம்மாவுடன் சென்று வாங்குமாறு கூறி வங்கி அட்டையையும் வழங்கி விட்டே சென்றார். நாட்டிற்காகவும், இனத்திற்காகவுமே அவர் போராடினார். பொய் சொல்லி விட்டேனும் செல்வார். நாங்கள் நாலு பேரும் இனி எப்படி வாழ போகின்றோம்?" என உயிரிழந்த நபரின் மனைவியின் தாய்   கண்ணீருடன் கருத்து தெரிவித்தார்.

 

எரிபொருள் கொள்கலனை எரியூட்ட போராட்டக்காரர்கள் முயற்சித்ததாக போலீஸார் கூறும் கருத்தை, பிரதேச மக்கள் நிராகரித்திருந்தனர்.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதல் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்படும் வரை போராட்டக்காரர்கள் எந்தவித சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கவில்லை என அந்த பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் அசார்டீன்,  தெரிவித்தார்.

கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தே, இந்த அனைத்து பிரச்சினைகளும் ஏற்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

எனினும், எரிபொருள் கொள்கலனை எரியூட்ட முயற்சித்தமையே, துப்பாக்கி பிரயோகம் நடத்த காரணம் என பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

எவ்வாறாயினும், நியமிக்கப்பட்ட குழு அனைத்து விதமான சாட்சியங்களையும் பெற்று விசாரணைகளை நடத்தி, உண்மையை கண்டறிந்து நீதிமன்றத்திற்கு விடயங்களை தெளிவூட்டும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாளாந்தம் 327 மில்லியன் ரூபா பெறுமதியான எரிபொருள்களை விற்பனை செய்தாளும் தினசரி  நட்டத்தை எதிர்நோக்குகிறது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக கொள்வனவு செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் ,குறைந்த குறுக்கீடுகளுடன் மின்சார விநியோகத்தை பராமரிக்க நாங்கள் தொடர்ந்து எரிபொருள்களை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் ,எவருக்காவது எரிபொருள் விலையைக் குறைக்க முடியுமாயின் அமைச்சுப் பதவியை அவர்களுக்கு வழங்கத் தயார் எனவும் அவர் தெரிவித்தார் .

லங்கா இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் (IOC) கலந்துரையாடியதாகவும் எதிர்காலத்தில் இரண்டு நிறுவனங்களின் எரிபொருள் விலையை சமமான அளவுகளில் அதிகரிப்பதற்கான சூத்திரத்தை கடைப்பிடிக்க உடன்பாடு ஏற்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும்  என இலங்கையின் நீதித்துறை மருத்துவதுறை தொழில்வல்லுனர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

நீதித்துறை மற்றும் மருத்துவதுறையை சேர்ந்த கரிசனை மிக்க தொழில்வல்லுநர்கள் - நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதற்காக இலங்கைகக்கான திசை-தேசத்திற்கான சுயாதீன தொழில்வல்லுநர்கள என்ற அமைப்பின் கீழ் ஒன்றுகூடினர்.

பின்வரும் விடயங்கள் குறித்து நீண்டநேரம் விவாதிக்கப்பட்டது.

அனைத்து இலங்கையர்களும் எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார சமூக துயரங்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் முன்வைக்கப்படும் வேண்டுகோள்களிற்கான காரணம்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக சட்டமொழுங்கு முற்றாக சிதைவடையக்கூடிய சூழ்நிலை அதன் காரணமாக நாட்டில் குழப்பநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு

இலங்கையின் அரசமைப்பு கட்டமைப்பிற்குள்ளும் சட்டத்திற்குள்ளும் இந்த பாரதூரமான நிலைமைக்கு தீர்வை காண்பதற்காக எடுக்கப்படவேண்டிய உடனடிநடவடிக்கைகள் குழுவினர் பின்வரும் தீர்மானத்திற்கு வந்தனர்.

பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும்.

1.பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும்( சபாநாயகருக்கான அறிவித்தல் மூலம் ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு அரசமைப்பின் 38 (1 )(b)பிரிவு இடமளிக்கின்றது )

2.புதிய ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்படவேண்டும்( முடிவடையாத பதவிக்காலத்திற்காக நாடாளுமன்றத்தை சேர்ந்த ஒருவரை தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்திற்கு அரசமைப்பு இடமளித்துள்ளது. 40 - (1) (a)

3.புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதும் பிரதமர் பதவி விலகவேண்டும்.( சபாநாயகருக்கான அறிவித்தல் மூலம் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு அரசமைப்பின் பிரிவு இடமளிக்கின்றது. பிரதமர் பதவி விலகியதும் அமைச்சரவை கலைக்கப்பட்டதாக கருதப்படும்)

4.புதிய பிரதமரின் தலைமையில் 18 முக்கிய அமைச்சுகளிற்கான அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களை உள்ளடக்கிய இடைக்கால – காபந்து அரசாங்கம் பதவியேற்கவேண்டும்.

- ஒரு வருடத்திற்கு செயற்படலாம்.

- இடைக்கால அமைச்சரவையில் இடம்பெறுகின்ற நபர்கள் குறிப்பிட்ட அமைச்சரவை பொறுப்புகளை ஏற்பதற்கான உரிய கல்விதகுதிகள் -விசேட திறமைகள் கொண்டவர்களாக காணப்படவேண்டும்,அவர்கள் அதிஉயர் நேர்மை கொண்டவர்களாக விளங்கவேண்டும்.

- இடைக்கால அரசாங்கத்தில் தொழில்சார் வல்லுனர்கள்- மிக நேர்மையான நிபுணர்கள் அங்கம் வகிப்பதற்கு எற்ற விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகவேண்டும்.

- காபந்து இடைக்கால அரசாங்கத்தின் காலத்தில் முன்னுரிமைக்குரிய நடவடிக்கையாக 20வது திருத்தத்தை கைவிடுவதற்கும் உரிய மாற்றங ;களுடன் 19 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்குமான முயற்சிகள் இடம்பெறவேண்டும்.