Print this page

மோடி ஒரு கோழை - இம்ரான்

September 14, 2019

காஸ்மீரில் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் உலக நாடுகளில் உள்ள முஸ்லீம்கள் தீவிரவாதத்தை நோக்கி  ஈர்க்கப்படும் நிலையை உருவாக்கும் என பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத்காஸ்மீரின் தலைநகர் முஜாபராபாத்தில் ஆற்றிய கடுமையான உரையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காஸ்மீர் மக்களிற்கான ஆதரவை வெளிப்படுத்துவதற்காக அந்த பகுதிக்கு சென்றுள்ள இம்ரான்கான் பாரிய பேரணியில் உரையாற்றியுள்ளார்.

அநீதிகள் உச்சகட்டத்தை அடையும்போது கௌரவமற்ற வாழ்வை விட மக்கள் மரணமே சிறப்பானது என கருத தொடங்குவார்கள் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

நீங்கள் ஆயிரக்கணக்கானவர்களை தடுத்துவைத்திருப்பதன் மூலம் மக்களை தீவிரவாதத்தை நோக்கி தள்ளுகின்றீர்கள் என இந்தியாவிற்கு நான் தெரிவிக்கவிரும்புகின்றேன் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மக்கள் இந்தியாவிற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள்,இது வெறுமனே இந்திய முஸ்லீம்கள் தொடர்பான விடயம் மாத்திரமல்ல உலகம் முழுவதும் உள்ள 1.25 மில்லியன் முஸ்லீம் மக்கள் இந்தியாவை உற்றுநோக்கிக்கொண்டுள்ளனர் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமரை  கோழை எனவும்  இம்ரான்கான்  வர்ணித்துள்ளார்.

காஸ்மீரில் 9 இலட்சம் இந்திய படையினரை நிலை கொள்ளச்செய்து அநீதிகளை இழைத்து வரும் கோழை என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

காஸ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய படையினர் அநீதிகளில் ஈடுபட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள இம்ரான் கான் துணிச்சலான மனிதர்கள் அப்பாவி மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லைஎனவும் குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Saturday, 14 September 2019 04:32