Print this page

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 பேரை தேர்ந்தெடுக்க 4 ஆயிரத்து 168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டப்பேரவைக்கு  அடுத்த மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிட மொத்தம் 7 ஆயிரத்து 255 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. இதில்  முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், சீமான், கமல்ஹசான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதேவேளையில், 2 ஆயிரத்து 740 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 347 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.

அதைதொடர்ந்து நேற்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 234 தொகுதிகளுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 ஆயிரத்து 168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 84 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக வால்பாறை, கோபிசெட்டிபாளையத்தில் தலா 6 பேரும், திண்டிவனம், கூடலூரில் தலா 7 பேரும் களத்தில் உள்ளனர். இதேபோன்று கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் 13 வேட்பாளர்க களத்தில் உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியலுடன், சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன