Print this page

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோர் 2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உளவுத்துறை தகவல் கிடைத்தும் இவ்வாறு செய்தமை ஊடாக  அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பொது சேவை புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவும், முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாவும் தனது தனிப்பட்ட பணத்தில் இருந்து நட்டஈடாக வழங்க வேண்டும் என  நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு ஒரு மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் சமர்ப்பித்த 12 மனுக்களின் தீர்ப்பை அறிவித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேகா அலுவிஹாரே, எல்.டி.பி தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

இந்த 12 அடிப்படை உரிமை மனுக்கள் குண்டுவெடிப்பில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலா வர்த்தகரான ஜனத் விதானகே, சரத் இத்தமல்கொட, மூன்று கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் ஷங்ரிலா குண்டுத் தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி மோடித ஏக்கநாயக்க ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.