Print this page

இலங்கையில் 75 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப் பிரச்சினையில்!

இலங்கையில் 75 இலட்சம் மக்கள் (மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் 33 வீதம்) கடுமையான உணவுப் பிரச்சினையை (உணவுப் பாதுகாப்பின்மை) எதிர்கொள்வதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள வெளிப்படுத்தியுள்ளார்.

உலக உணவுப் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதென அவர் கூறினார்.

இதேவேளை, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உணவுப் பாதுகாப்பற்ற 23 நாடுகளில் இலங்கை 20ஆவது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள 57 இலட்சம் குடும்பங்களில் 37 இலட்சம் குடும்பங்கள் அரசாங்கத்திடம் ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த அத்துகோரள, 65 வீதமான குடும்பங்கள் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்வதில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்தார்.