Print this page

மஹிந்த கஹந்தகம விளக்கமறியலில்

வீடு வாங்கித் தருவதாகக் கூறி 70 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புறக்கோட்டை தொழிற்சங்கத் தலைவர் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. 

கொம்பனித்தெரு வீதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மெட்ரோ வீடமைப்புத் தொகுதியில் வீடொன்றை வழங்குவதாகக் கூறி முறைப்பாட்டாளரிடம் 70 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இரண்டு தடவைகள் காசோலைகள் மற்றும் பணத்தின் ஊடாக இந்த தொகையை சந்தேக நபருக்கு வழங்கியிருந்தார்.

இதன்படி, கொம்பனித்தெரு பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் இன்று (20) கைது செய்யப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கண்டியைச் சேர்ந்த ஜயந்த முனவீர என்பவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தின் பிரிவு 07க்கு முறைப்பாடு செய்திருந்தார்.