Print this page

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வெளிநாட்டு விசா நாடகம் அம்பலம்

November 15, 2023

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளை மேலும் 3 நாட்களுக்கு கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கு நேற்று (14) தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, இம்மாதம் 24, 27, 28 ஆகிய திகதிகளில் கிரிக்கெட் நிறுவனங்களின் அதிகாரிகளை கோப் குழு முன்பு அழைக்க முடிவு செய்யப்பட்டது.

அங்கு, 2022ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20/20 உலகக் கிண்ணப் போட்டிகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்காய்வு அறிக்கை மற்றும் 2019ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய அறிக்கை ஆகியவற்றில் விசாரிக்கப்படும்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியைக் காண தனது மாமியார், மைத்துனர் உள்ளிட்ட நண்பர்கள் குழுவை அழைத்துச் சென்றதாக கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா நேற்று கோப் குழுவிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 2020 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுபவர்கள் மற்றும் நிறுவனத்தின் பரிந்துரைகள் தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய அறிக்கை தொடர்பில் கலந்துரையாட கோப் குழு, கிரிக்கெட் நிறுவனத்தை அழைத்திருந்தது.

கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி உலகக் கிண்ணப் போட்டிகள் காரணமாக தனது மனைவிக்கு விசா கிடைக்கவில்லை என்றும் அதற்கு முன்னர் அவர் அவுஸ்திரேலியாவில் இருந்ததாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

போட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஏனைய குழுவினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

அங்கு தயாசிறி ஜயசேகர எம்.பி, தான் எடுத்தவர்களை அறிவிக்குமாறு தலைவரிடம் கேட்டுக்கொண்டார்.

“ரொபர்ட் சில்வா எனது மைத்துனர், டெய்சி ஜீனெட், எனது மனைவியின் தாய். ஸ்ரீமால் குணரத்ன எனது நண்பர். நிஷாதி பத்மசிறி அவரது மனைவி, சஞ்சய் சமரசிங்க எனது நண்பர். ஆர். ஷெனுலா தினுசிகா மற்றும் சாரா தினாலி ஆகியோர் அமைச்சரின் மகள்களாவர். கடிதத்தை இருவரிடமும் கொடுத்தேன். அமைச்சருக்கும் கடிதம் கொடுத்தேன். ஆனால் அப்போது அரசியல்வாதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் விசா வழங்கப்படவில்லை. சுதத் ரோஹன சந்திரேஸ்கரவின் பெயருக்காக காத்திருக்கிறேன்..."

உலகக் கிண்ணப் போட்டிகளைக் காணச் சென்ற அனுராதா எதிரிசிங்க மற்றும் ஷலனி தாரக ஆகிய இரு நடிகைகளின் பெயர்கள் உப தலைவர் ஜயந்த தர்மதாசவினால் சேர்க்கப்பட்டதாக அங்கு சென்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.