Print this page

முஸ்லிம்களிடம் ஞானசார தேரர் மன்னிப்பு கேட்டதன் காரணம்

February 17, 2024

கூரகல விகாரை தொடர்பில் தாம் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களால் முஸ்லிம் மக்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதுடன் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கல்கொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே முன்னிலையில் கூண்டில் இருந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பான வழக்கின் சாட்சிய விசாரணை முடிவடைந்த பின்னர், வழக்கின் தீர்ப்பு மார்ச் 28ஆம் திகதி வழங்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூரகல விகாரை தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தேசிய மற்றும் மத அமைப்புகளுக்கு தீங்கானது என கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.