Print this page

இன்று முதல் பொது மன்னிப்பு காலம்

September 01, 2024

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் நாட்டை விட்டு வெளியேற இரண்டு மாத பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று (01) முதல் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் ஆட்பதிவு , சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு அதிகார சபையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழில் வழங்குனரின் சட்டப்பூர்வ அனுமதியின்றி பணியிடத்திலிருந்து விலகி இருப்பவர்கள் மற்றும் செல்லுபடியாகும் விசா இல்லாதவர்கள் இந்த பொது மன்னிப்புக் காலத்தில் அபராதம் அல்லது பிற சட்டத் தடைகளுக்கு உட்படாமல் நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது சம்பந்தப்பட்ட விசா ஆவணங்களை சட்டப்பூர்வமாக செயல்படுத்தவோ வாய்ப்புள்ளது. 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் பொது மன்னிப்புக் காலத்தின் போது தமது விசாக்களை சட்டப்பூர்வமாக ஏற்பாடு செய்ய அல்லது இலங்கைக்கு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.