Print this page

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

December 13, 2024

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை எடுத்தது.

தற்போதைய சபாநாயகர் கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர், 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் போதும், பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு கௌரவ சபாநாயகர் பதவிக்கு தெரிவு செய்யப்படும் போதும், சபாநாயகர் பதவியின் கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும், அவரிடம் இல்லாத மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியலாளர் தொடர்பான BSc பட்டம் பெற்றவர் என்றும், ஜப்பானில் உள்ள வசேதா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர் என்றும் சுட்டிக்காட்டி, தனது பெயருடன் கலாநிதி என்று பயன்படுத்தியதால் மக்களிடமிருந்து எழுந்த தொடர்ச்சியான எதிர்ப்பின் போதும், தகவல் வினவப்பட்ட போதும், மௌனமாக இருந்து உண்மைத் தகவல்கள் வெளிப்படுத்துவதை தாமதமாக்கியதால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை 3 ஆவது பகுதியில் பிரிவு 6 இன் பிரகாரமும், அந்த நடத்தைக் கோவையின் 5 ஆவது பிரிவின் நெறிமுறைகளின் பிரகாரம் உள்ள நடத்தை விதிகளின்படி மேற்படி விதிகள் மீறப்பட்டுள்ளமையால் மற்றும் பாராளுமன்றம், அரசியலயைப்பு மற்றும் அவரால் நேரடியாகத் தலைமை தாங்கப்படும் ஏனைய உயரிய நிறுவனங்களினதும் நம்பிக்கையை மீறியுள்ளபடியால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.சி.அலவத்துவல, அஜித் பீ பெரேரா, சுஜித் சஞ்சய் பெரேரா, சதுர கலப்பதி, ஜகத் விதான மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.