ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் தேவைக்கு ஏற்ப ஆட்டி வைப்பதற்கு, இலங்கை ஐ.நா.வின் கைப்பாவை அல்ல. உங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த அரசாங்கத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தால் அதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
களுத்துறையில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்கள் பாரிய உதவி, ஒத்துழைப்புக்களை வழங்கின.30 ஆண்டு கால யுத்தத்தின் நிறைவில் இராணுவ வீரர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு பலரும் முயற்சித்தனர். குறிப்பாக புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காகவே இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்த வகையில் தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் அந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கானவையா என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆனால் உங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த அரசாங்கத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தால் அதற்கு நாம் தயாராக இல்லை.
எனவே அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைகளுக்காக நாட்டை ஆட்டி வைப்பதற்கு இலங்கை ஐ.நா.வின் கைப்பாவை இல்லை என்பதை உயர்ஸ்தானிகர் வோல்க்கருக்கு நினைவுபடுத்துகின்றோம் என்றார்.