முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் அவருக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச அரச வதிவிடத்தை இருந்து வெளியேறியமை தொடர்பில் பலரும் தங்களது பல கோணங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மகிந்த ராஜபக்ச என்பவர் அரசியல்வாதி மட்டும் அல்ல. அவர் இந்த நாட்டில் நிலவிய 30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர்.
சர்வதேச அழுத்தங்களுக்கு ஒரு போதும் அடிபணியாமல் தன் நாட்டுக்காகத் தனது பொறுப்பை சரிவர செய்து முடித்தார்.
மகிந்தவுக்கு மூன்று புதல்வர்கள் உள்ளனர். அவர்களால் மகிந்தவைப் பார்த்துக் கொள்ள முடியாதா? என்று சிலர் கேட்கின்றனர்.
தனது தந்தையை பார்த்துக்கொள்ளும் இயலுமை நாமலுக்கு உள்ளது. எனினும் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்தவுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் தான் பிரச்சனை உள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டு இருந்தாலும் பிரிவினைவாத சிந்தனையுடையோர் இன்னும் இருக்கின்றனர். அவர்கள் இந்த நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டு செல்ல முற்படுகின்றனர்.
அதனால் தான் அரகலய காலத்தில் கூட நிதி வாரி வழங்கப்பட்டது. அதன் ஓர் அங்கமாகவே மகிந்த வெளியேற்றப்பட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச மீண்டும் விஜேராம மாவத்தைக்குச் செல்ல மாட்டார். அவரை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
தமது நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தலைவரை வேறு நாடுகள் இவ்வாறு செய்வதில்லை. ஆனால் இலங்கையில் தான் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.