Print this page

அடுத்தது மனுஷ...

September 25, 2025

2023 ஆம் ஆண்டு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகப் பணியாற்றிய மனுஷ நாணயக்காரவை நாளை (26) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையிலான விவசாயத் துறை வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2023 நவம்பர் 05ஆம் திகதியன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பியது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய கடந்த 08ஆம் திகதி அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் வெளிநாட்டில் இருந்ததால் வாக்குமூலம் அளிக்க அவர் ஆஜராகவில்லை.

எனவே, மேற்கூறிய விடயங்கள் தொடர்பாக நாளை காலை 09.30 மணிக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஜாவத்த வீதி, கெப்பட்டிபொல மாவத்தையில் உள்ள பழைய தேசிய அடையாள அட்டை அலுவலக கட்டடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள ஊழல் விசாரணைப் பிரிவு IV இல் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.