திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் சிலை அகற்றப்பட்ட விடயத்தை சிலர் இனப்பிரச்சினையாக மாற்ற முயற்சிப்பதாகவும், அவர்கள் தோல்வியடைந்த அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலின்படி செயல்பட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் வடக்கு கிழக்கிற்கான சிங்கள அமைப்பின் அமைப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய குழப்பவாதிகள் இருவர் கொழும்பில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் இங்கு வந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் எவ்வித இனப்பிரச்சினையும் இல்லை என்பதை வலியுறுத்திய அவர், இங்குள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லீம் மக்கள் எமக்கோ அல்லது புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயத்திற்கோ எதிர்ப்பானவர்கள் அல்ல. எனவே நாட்டு மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
சிலரின் அரசியல் அபிலாஷைகளுக்கு யாரும் பலியாக வேண்டாம் என்றும், அவர்களின் குறுகிய மற்றும் இனவாத அரசியலுக்கு திருகோணமலையைப் பயன்படுத்த நாம் அனுமதிக்க மாட்டோம் என்றும் சிங்கள அமைப்பின் அமைப்பாளர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.