இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று (28) அதிகாலை நிலவரப்படி அதிகபட்ச மழைவீழ்ச்சி வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
அதன் அளவு 315 மி.மீ என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (27) மு.ப. 8.30 மணி முதல் இன்று (28) அதிகாலை 4.30 மணி வரையிலான காலப்பகுதியில் பதிவான மழைவீழ்ச்சி அளவுகளை கருத்திற்கொண்டு இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் பிரதேசத்தில் 305 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், மூன்றாவது அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் உள்ள கண்டியில் பதிவாகியுள்ளது, அதன் அளவு 223.9 மி.மீ ஆக உள்ளது.
இதன்படி, இலங்கையில் நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 200 மி.மீ இற்கும் அதிகமான மிக பலத்த மழையும், திருகோணமலை, பதுளை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீ இற்கும் அதிகமான மிக பலத்த மழையும் பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் மிகவும் பலத்த காற்றும், இடைக்கிடையே மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் மிக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.