சமீப நாட்களில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் குறித்து மக்களுக்கு தகவல் வழங்கிய நபர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை தண்டிக்க அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இடையில் ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸ் அதிகாரியை தாக்கியதாகவும், இருப்பினும் இதுவரை அந்த உறுப்பினர் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலாக, அந்த சம்பவம் தொடர்பான தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்திய ஊடக நிறுவனங்களை ஒடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், சமீபத்தில் ஆளும் தரப்பைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சா பயிரிட்டிருந்ததாகவும், அதனை கைப்பற்ற சென்ற பொலிஸ் அதிகாரி தாக்கப்பட்டதாகவும் கூறினார். அந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினரும், கஞ்சா தொடர்புடைய நபர்களும் வெளியில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“அடிபட்டவர் சிறையில், அடித்தவர் வெளியில். கஞ்சாவுக்கு உரியவரும் வெளியில். கைது செய்ய முயன்ற அதிகாரி சிறையில். தாக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் வெளியில் இருக்கிறார்” என அவர் விமர்சித்தார்.
இவ்வாறான சம்பவங்களை நாட்டுக்கும் உலகுக்கும் தெரியப்படுத்தியதற்காக ஊடக நிறுவனங்களை ஒடுக்க இந்த அரசாங்கம் முயற்சி செய்கிறது என்றும், பொலிஸ் திணைக்களத்தின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் மா அதிபர் அல்லது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதுகுறித்து உரிய முறையில் தலையிடவில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.