Print this page

நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இல்லாமை சவால்

February 28, 2026

இலங்கையில் எதிர்காலத்தில் உருவாக வேண்டியது தற்போதைய அரசை விடவும் சிறந்த நிர்வாகம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து உரையாற்றிய போது அவர் இதனை வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், ஒரு அரசு என்ற வகையில் தாங்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் தரநிலையையோ அல்லது அளவுகோலையோ உருவாக்கினால், அடுத்ததாக ஆட்சிக்கு வரும் தரப்பின் கடமை அந்த நிலையை மேலும் உயர்த்துவதே அன்றி அதை குறைப்பது அல்ல என்றார்.

ஒரு அரசியல் தரநிலை 5 என்ற மட்டத்தில் இருந்தால், அது 5.5 ஆக உயர்த்தப்பட வேண்டும். ஆனால் நாட்டின் அரசியல் சமூகத்தில் பல சமயங்களில் நடைபெறுவது அந்த தரநிலையை 4 ஆகக் குறைத்து, “நாங்களும் அவர்களைப் போலவே” எனக் கூறி உறவினர் ஆதரவு, அநீதி நியமனங்கள் மற்றும் ஊழல் போன்ற செயல்களை நியாயப்படுத்த முயல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பழைய அரசியல் கலாச்சாரத்தில் நிலவிய உறவினர் ஆதரவு மற்றும் முறைகேடான நிதி பரிவர்த்தனைகள் தமது ஆட்சியில் இடம்பெறாது என அமைச்சர் உறுதியளித்தார். மேலும், அத்தகைய ஊழல் நடவடிக்கைகளில் தாங்கள் ஈடுபடமாட்டோம் என்றும் தெரிவித்தார்.

அரசு கடைப்பிடித்து வரும் தரநிலைகளை மேலும் உயர்த்த வலுவான எதிர்க்கட்சியின் இல்லாமை தற்போது நிலவும் சவால்களில் ஒன்றாக இருப்பதாகவும், இருந்தபோதிலும் தமது அரசு சுய ஒழுக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.