ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே தொடர்பில்லையென நிரூபிக்கப்பட்டால், விசாரணை முடிவில் அவர் விடுவிக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடைபெற்ற காலத்தில் சுரேஷ் சல்லே குறித்து தாம் குறிப்பிட்டது பல்வேறு நபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே எனவும் அவர் கூறினார்.
அந்த நேரத்தில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்கள் தம்மை அமைதியாக இருக்கும்படியும் சல்லே பற்றி எந்தவிதமான கருத்தையும் வெளியிட வேண்டாம் எனவும் கூறி கடுமையாக கண்டித்ததாகவும் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அப்போது தாம் சல்லே மீது நேரடியாக குற்றச்சாட்டு சுமத்தவில்லை என்றும், அவர்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபட வேண்டும் எனவே கூறியதாகவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.
இப்போது கத்தோலிக்க திருச்சபையின் பார்வையில் சுரேஷ் சல்லே குற்றவாளியாக கருதப்படுகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துகளை அவர் சியத தொலைக்காட்சியின் “திரிகோணய” அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்தார்.