Print this page

உரங்களை விநியோகிக்க QR முறை

உரங்களை விநியோகிப்பதற்காக QR முறைமையை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஒரு முன்முயற்சி (Pilot) திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

உரங்களை வழங்கும் செயல்முறையில் QR முறைமையை பயன்படுத்துவது மிகவும் அவசியமானதாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உரங்களை விநியோகிக்க QR முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவு தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது நாட்டில் உரம் தொடர்பான பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும், போதுமான அளவு உரம் கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், சில கருப்புச் சந்தை வர்த்தகர்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் முன்பே இறக்குமதி செய்யப்பட்ட உரங்களின் விலையை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது ஒரு உர மூட்டை ரூ.12,000 முதல் ரூ.13,000 வரை விற்பனை செய்யப்படுகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.

அநியாயமாக விலை உயர்த்த வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பிரச்சினையில் நுகர்வோர் விவகார அதிகார சபை தலையீடு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எப்படியாயினும் உர பற்றாக்குறை ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த பயிர் பருவத்தில் பெரிய அளவில் உரப் பிரச்சினை ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், வரும் மே மாதத்தில் சீனாவிலிருந்து ஒரு உரக் கையிருப்பு பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.