Print this page

மின்வெட்டு பொறுப்பை ஜனாதிபதி ஏற்க வேண்டும்

எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஈரான் போர் நிலைக்கு அல்லாது தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஏற்க வேண்டும் என முன்னாள் மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் சூறாவளி பாதிப்புக்குள்ளான விகாரைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இதனை தெரிவித்தார். இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரணவக, இயற்கை அனர்த்தங்களுக்குப் பிறகு மீட்பு நடவடிக்கைகளில் அரசு பல தவறுகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக, தன்னார்வ அமைப்புகளுக்கு வீடுகள் மற்றும் மதஸ்தலங்களை மீளக் கட்ட அனுமதி வழங்காதது முக்கிய குறையாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், தாழ்ந்த தர நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதால் தினமும் 6 முதல் 8 இலட்சம் லிட்டர் டீசல் வீணாகின்றது என்றும், இது போக்குவரத்து துறைக்கு பயன்படுத்த வேண்டிய எரிபொருள் எனவும் அவர் கூறினார். இந்த நிலைமையே எதிர்காலத்தில் மின்வெட்டிற்கு காரணமாக அமையும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், எரிபொருள் டெண்டர்கள் தாமதமாக வழங்கப்பட்டதால் நாட்டிற்கு தேவையான எண்ணெய் இன்னும் வரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, மின்சார நெருக்கடி ஏற்பட்டால் அதற்கான காரணம் வெளிநாட்டு போர் அல்ல; அரசின் தவறான முடிவுகளே காரணம் எனவும், அதன் பொறுப்பை ஜனாதிபதி ஏற்க வேண்டும் எனவும் பாடலி சம்பிக ரணவக வலியுறுத்தினார்.