நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தின் மின்சார உற்பத்தி தற்போது சுமார் 200 மெகாவாட்டால் குறைந்துள்ளதாக முன்னணி சமூகநீதி கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
அவரின் தகவலின்படி,நுரைச்சோலை மின்நிலையம் வழக்கமாக 810 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்சார வலையமைப்பிற்கு வழங்குகிறது. ஆனால், தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்பட்டதன் பின்னர் ஆரம்பத்தில் சுமார் 100 மெகாவாட் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது, இந்த உற்பத்தி குறைவு சுமார் 190 மெகாவாட் வரை அதிகரித்துள்ளதாகவும், இதன் மூலம் முன்னர் கொண்டு வரப்பட்ட நிலக்கரியைவிட மேலும் தரமற்ற நிலக்கரி பின்னர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படுவதாகவும் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
மேலும், மார்ச் 21ஆம் திகதி இரவு சுமார் 1000 மெகாவாட் மின்சாரம் டீசல் மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, போக்குவரத்திற்காக ஒதுக்கப்பட்ட டீசல் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதால், எதிர்காலத்தில் மின்வெட்டு மட்டுமின்றி போக்குவரத்து நெருக்கடியும் உருவாகும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.