குருக்கள்மடம் மனிதப்புதை குழியில் நேற்று (30) திங்கட்கிழமை முதலாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பமாகின.
களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் முன்னிலையில் இந்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
சட்டத்தரணி றாஸீ முஹம்மத் உள்ளிட்ட சட்டத்தரணி குழுவினர், காணாமலாக்கப்பட்டோர் அலுவலக அதிகரிகள், பொலிஸார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பிரிவு, தொல்லியல் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, உள்ளிட்ட பலர் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
இது தவிர, குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவியிருந்த 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில்,புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள்,இவ்விடத்தில் வைத்து ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் மிக நீண்ட காலமாக இடம்பெற்று வந்த நிலையில்,நீதிமன்ற உத்தரவுக்கிணங்க இப்புதைகுழி நேற்று முதலாம் கட்டமாகத் தோண்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.