Print this page

நிதி மோசடி குறித்து விசாரணைகள் ஆரம்பம்

இலங்கையின் பொருளாதார மீட்சியை நோக்கி அரசு பயணித்து வருகின்ற நிலையில், நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) பெரும் நிதி மோசடி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த மோசடியின் மூலம் சுமார் 13 பில்லியன் ரூபாய் அளவிலான தொகை களவாடப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் கணிக்கப்பட்டதை விட இழப்பு அதிகமாக இருப்பதும் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கொழும்பு பங்குச் சந்தைக்கு வழங்கிய தகவலின்படி, இழந்த தொகையை மீட்டெடுக்க சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த மோசடியால் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள் அல்லது சேமிப்புத் தொகைகள் எந்தவித பாதிப்பும் அடையவில்லை என்றும், வங்கியின் தினசரி சேவைகள் வழமையானபடி நடைபெற்று வருகின்றன என்றும் வங்கி தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், நிலைமையை கருத்தில் கொண்டு பங்குதாரர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்த இலாபப் பங்கீட்டை தற்காலிகமாக நிறுத்துமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், இந்த மோசடியில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சில பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இந்த பெரிய அளவிலான நிதி மோசடி சம்பவம் வங்கி துறையிலும் பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.