Print this page

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: இறுதி தீர்ப்பை நீதிமன்றத்திற்கே ஒப்படைக்க வேண்டும்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பரிந்துரைகள் அடங்கிய ‘B’ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலின் மூளைக்காரர் குறித்து இறுதி தீர்மானத்தை நீதிமன்றத்திற்கே ஒப்படைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிறியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பல அரசுகள் விசாரணைக் குழுக்களை அமைத்தன. அவை பல பரிந்துரைகளை முன்வைத்திருந்தாலும், அவை முறையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனால் தற்போது முதன்முறையாக இந்த தாக்குதல் தொடர்பாக 25 பக்கங்களைக் கொண்ட ‘B’ அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், பல்வேறு நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், எந்த சம்பவத்திற்கும் இறுதி தீர்ப்பு வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கே இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் நம்பகமான மற்றும் வலுவான நீதித்துறை அமைப்பு உள்ளது என்றும், இலங்கையின் நீதிபதிகள் சர்வதேச நீதிமன்றங்களிலும் பணியாற்றியுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான குற்றவாளிகளை கண்டறியும் பொறுப்பையும் அதற்கான இறுதி தீர்ப்பையும் நீதிமன்றத்திற்கே ஒப்படைத்து, அந்த செயல்முறைக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.