2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக 10 விமானங்கள் கொண்ட விமானப்படையை கொள்வனவு செய்தபோது வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான சேவை அமைச்சர் பிரியங்கர ஜெயரட்ன ஆகியோர் இன்று (12) லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் சாமிந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவியான ப்ரியங்கா நியோமாலி ஆகியோரை சந்தேகநபர்களாக குறிப்பிடும் வழக்கு கடந்த 05ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த தகவல்களை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஏப்ரல் 30ஆம் திகதி அனுப்பப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில் மகிந்த ராஜபக்ச மே 12ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்தது.
மேலும், ஏர்பஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு கிடைத்ததாகக் கூறப்படும் லஞ்சத் தொகை, மகிந்த ராஜபக்சவின் 2015 ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தென் மாகாண முன்னாள் ஆளுநர் வில்லி கமகேவிடம் நேற்று (11) விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
நேற்று காலை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வந்த வில்லி கமகே சுமார் நான்கு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.
2013ஆம் ஆண்டு விமான கொள்வனவில் பிரபல ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனத்திலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சத் தொகை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், மகிந்த ராஜபக்ச 2015 தேர்தல் பிரசார அலுவலகம் ஷமீந்திர ராஜபக்ச தலைமையில் செயல்பட்டதாகவும், அதன் நிர்வாக நடவடிக்கைகள் வில்லி கமகே தலைமையில் முன்னெடுக்கப்பட்டதாகவும், இந்த நிதி பரிவர்த்தனைகள் “சதிசி” என்ற ஊடக நிறுவனத்தின் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் நடைபெறுவதாகவும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அத்துடன், சிங்கப்பூரைச் சேர்ந்த “பிஸ் சொலூஷன்” நிறுவனம் மூலம் Standard Chartered வங்கியின் ஊடாக இலங்கையின் “Ago” என்ற நிறுவனத்திற்கு பணம் அனுப்பப்பட்டதாகவும், பின்னர் அந்த நிதி “சதிசி மீடியா கிரியேஷன்ஸ்” நிறுவனத்தின் இணை உரிமையாளர் சமரவிக்ரமகே சமன் சம்பத் என்பவருக்கு காசோலைகள் மூலம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சமன் சம்பத் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், அந்த நிதி 2015 ஜனாதிபதி தேர்தல் பிரசார செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், ஷமீந்திர ராஜபக்ச தலைமையில் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட விதம் மற்றும் ஒருகட்டத்தில் 9 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள காசோலை பெறப்பட்டமை உள்ளிட்ட விடயங்களும் விசாரணைகளில் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மேலும் தெரிவித்தது.