இலங்கை ரூபாய் தொடர்ச்சியாக மதிப்பிழந்து வருவதால், எதிர்காலத்தில் எரிபொருள், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயரக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மத்திய வங்கி சந்தையில் உள்ள அமெரிக்க டாலர்களை வாங்கிக் கொண்டிருப்பதும், நிதி அமைப்பில் ரூபாய் அதிகப்படியாக இருப்பதும் காரணமாக டாலருக்கான தேவை அதிகரித்து, ரூபாயின் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய சர்வதேச அரசியல் சூழ்நிலைகளின் தாக்கத்தால் சுற்றுலாத்துறையிலிருந்து கிடைக்கும் வெளிநாட்டு வருவாய் குறைந்திருப்பதோடு, ஏற்றுமதி துறைக்கு ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக நாட்டுக்குள் வரும் டாலர் வருவாயும் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு ரூபாய் பலவீனமடைவது எரிபொருள் விலைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், எதிர்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், எரிபொருள் மற்றும் மின்சாரச் செலவுகள் அதிகரிப்பதன் மூலம் மற்ற அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் உயர்ந்து, பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
“பெட்ரோல், டீசல் விலைகளில் தாக்கம் ஏற்படலாம். ஏனெனில் நாம் அவற்றை டாலரில் இறக்குமதி செய்கிறோம். பின்னர் அதை ரூபாயாக மாற்றி தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது ரூபாய் மதிப்பிழக்கிறது என்றால் அதே அளவில் எரிபொருள் விலையும் உயரும். எண்ணெய் விலை உயர்வது ஊடாக பணவீக்கமும் அதிகரிக்கும். அதனுடன் மின்சார கட்டணம், நீர் கட்டணம் மற்றும் பொருட்களின் விலைகளும் உயரும்,” என அவர் தெரிவித்துள்ளார்.