Print this page

சஜித்தை பிரதமராக்க முயற்சி!!

தற்போதைய அரசாங்கத்தில் உருவாகியுள்ள சில நெருக்கடியான நிலைமைகளை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவியை வழங்கி, அவரை மையமாகக் கொண்டு ஒன்றிணைவது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அணியின் சிலர் உள்ளிட்ட பல தரப்புகள் கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் “மாலிமாவ” அலுவலகம் ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகவும், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

தற்போது அரசாங்கத்தை முன்னெடுத்து செல்லுவதில் சிரமமான நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், கட்சி தாவுதலைத் தடுக்கும் வகையில் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை கொண்டு வர முயற்சிப்பதும் இந்த உள்கட்சிச் சிக்கலின் விளைவாக இருக்கலாம் என கருத்து வெளியிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், மாலிமா அரசாங்கத்திலுள்ளவர்களே அல்லாமல், பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஏதேனும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டால், தேவையான தலைமைத்துவத்தை வழங்க தயாராக இருக்குமாறு அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், சஜித்துடன் இணைந்து பெரும்பான்மை பலத்தை வெளிப்படுத்தி, அவரை பிரதமராக நியமிக்கும் திட்டம் ஒன்று இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும், தற்போதைய அரசாங்கத்திலுள்ள சிலரும் அவருடன் இணையத் தயாராக இருப்பதாகவும் சுஜித் மேலும் தெரிவித்துள்ளார்.