Print this page

ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார்-ட்ரம்ப்

September 14, 2019

அல்கொய்தா தலைவர் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதை, உறுதி செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

அல்-கைதா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனின் மகன்தான் ஹம்சா பின்லேடன். இவர் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாக ஜூலை மாதம் முதல் பல ஊடகங்களில் யூக அடிப்படையில் செய்திகள் வெளியாகி வந்தன.

இப்போது முதல் முறையாக அமெரிக்க அதிபர் இதை ஒப்புக்கொண்டுள்ளார் "ஆப்கானிஸ்தான் / பாகிஸ்தான் பிராந்தியத்தில்" அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஹம்சா கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

"ஹம்ஸா பின்லேடனின் இழப்பு அல்-கொய்தாவின் முக்கியமான தலைமைத்துவத்தையும், அவரது தந்தையுடனான குறியீட்டு தொடர்பையும் இழக்க வைப்பது மட்டுமல்லாமல், தீவிரவாத குழுவின் முக்கியமான செயல்பாட்டு நடவடிக்கைகளை குறைக்க உதவும்" என்று டிரம்ப் சார்பில் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் கடந்த மாத இறுதியில், ஹம்சாவின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.

பின்லேடன் இறந்துவிட்டார் என்பது எனது புரிதல் என்று அவர் கூறினார், ஆனால் டிரம்பும் பிற மூத்த அதிகாரிகளும் இந்த செய்தியை பகிரங்கமாக உறுதிப்படுத்தவில்லை.

ஒசாமா பின்லேடனின் 20 குழந்தைகளில் 15 வது குழந்தையும், அவரது மூன்றாவது மனைவி ஹம்ஸாவின் மகனுமானவர் ஹம்சா பின்லேடன். சுமார் 30 வயதுள்ளவராக கருதப்படுகிறார்.

"அல்-கொய்தா அமைப்பின் ஒரு பெரும் தலைவராக ஹம்சா வளர்ந்து வருகிறார்" என்று அறிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை, அவர் தலைக்கு, 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை கடந்த பிப்ரவரி மாதம், அறிவித்தது.

2011 ஆம் ஆண்டில், அல்கொய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க நேவி சீல்ஸ் பாகிஸ்தானின், அபோதாபாத் பகுதியில் வைத்து சுட்டு கொன்றது.

ஆனால் அந்த பகுதியில் அப்போது ஹம்ஸா சிக்கவில்லை. இதன்பிறகு அல்கொய்தாவின் தலைவராக ஹம்சா உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Saturday, 14 September 2019 15:33