Print this page

‘பின்வாங்க மாட்டேன்‘

September 20, 2019

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் கட்சிக்குள்  எந்த பிளவுகளும் முரண்பாடுகளும் இல்லாது இரண்டு, மூன்று நாட்களில் தீர்வு கிடைக்கும். அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எனது நிலைப்பாட்டில் எந்த பின்வாங்கலும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய முன்னணியினதும் சிவில் அமைப்புகளினதும் முழுமையான ஆதரவு எனக்கு கிடைத்துள்ளது, வெகு விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் முழுமையான ஆதரவையும் பெற்றுக்கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆராயும் வகையில் தொடர்ச்சியாக கட்சி உறுப்பினர்களும் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களும் கூடி கலந்துரையாடி வருகின்ற நிலையில் இன்று பிற்பகல் ஐக்கிய தேசிய முன்னணியின்  பங்காளிக்கட்சிகளின் தலைவர்,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க- பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.