Print this page

இலங்கையில் குழப்பம் ஏற்படும்: அமெரிக்கா எச்சரிக்கை

November 15, 2019

 

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள தமது நாட்டு பிரஜைகளை மிகுந்த அவதானமாக இருக்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஆர்பாட்டங்கள் முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் விடுக்கப்பட்ட இரண்டாவது நிலை பயண எச்சரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

பெரிய கூட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களுக்கு அருகில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சுற்றுலா தளங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பொது இடங்களுக்குச் செல்லும்போது அவதானமாக இருக்குமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தோடு உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் உள்நாட்டு ஊடகங்களை கண்காணித்து, புதிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.