Print this page

கமலை கைதுசெய்ய கோரிக்கையாம்?

December 13, 2019

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை கைது செய்யும்படி ஐ.நா முன்னாள் அதிகாரியான யஸ்மின் சூக்கா 100 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை முன்வைத்து வலியுறுத்தியுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

சர்வதேச போர்க்குற்ற சட்டங்களுக்கு அமைய அவரைக் கைது செய்வதற்கான கோரிக்கையை அவர் முன்வைத்திருக்கின்றார். சுவிட்ஸர்லாந்து – ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அவர் இந்த அறிக்கையை தாக்கல் செய்திருப்பதாக திவயின சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

53ஆவது படைக் கட்டளைத் தளபதியாக இறுதியுத்தத்தில் கடமையாற்றிய தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்ல்க்கால் மற்றும் புதுமாத்தளன் ஆகிய பகுதிகளை மீட்கின்ற முயற்சியில் ஈடுபட்ட அதேவேளை அங்கு இருந்த ஆயிரக்கணக்கான மக்களை கொன்றதாக யஸ்மின் சூக்கா குறித்த அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக கடமைபுரியும் ஒருவருக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.