Print this page

அரண்மனையிலிருந்து ஹரி- மேகன் வெளியேறினர்

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் அரச குடும்ப கடமைகளில் இருந்து விலகுவதாக பக்கிம்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

HRH - His/Her Royal Highness என்று குறிப்பிடப்பட்டு பிரிட்டன் அரச குடும்பத்தின் ஒரு முக்கிய சில உறுப்பினர்கள் அழைக்கப்படுவர். ஹரி மற்றும் மேகன் இந்த பட்டங்களை குறிப்பிட்டு இனி அழைக்கப்பட மாட்டார்கள் என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் அரச கடமைகளுக்காக இனி பொதுமக்களின் வரிப்பணத்தையும் பயன்படுத்த மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரிட்டனில் அவர்களுக்கான குடும்ப வீடான ஃப்ரோக்மோர் காட்டேஜ்ஜை புதுப்பிக்க மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெறப்பட்ட 2.4 மில்லியன் பவுண்டுகள் நிதியை திரும்பிக் கொடுக்க ஹரி மற்றும் மேகன் முடிவெடுத்துள்ளதாகவும் பக்கிம்ஹாம் அரண்மனை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல மாதங்கள் இதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, ஹரி, மேகன் மற்றும் பேரக்குழந்தைக்கு சிறப்பான வகையில் முழு ஆதரவு அளிக்க முடிவெடுக்கப்பட்டதாக பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹரி, மேகன் மற்றும் ஆர்ச்சி எப்போதும் என் குடும்ப உறுப்பினர்களாகவே இருப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.