Print this page

ஜனாதிபதி பெயரில் வந்த “சீன பொதியால்” சர்ச்சை

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பெயரில், சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பொதியால், பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்தபொதியையும், வாங்கி சென்ற நபரையும் கைதுசெய்யுமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என அறியமுடிகின்றது. 

ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடைய அதிகாரி என அடையாளப்படுத்திக்கொண்டு, சீனாவில் இருந்து ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் மூலம் பொதி ஒன்றை இலங்கைக்கு கொண்டுவந்த நபர் குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஷாங்காயில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பொதியொன்று கொண்டு வரப்பட வேண்டும் என்று அந்த அதிகாரி ஸ்ரீலங்கா எயார்லைன்ஸுக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், அந்த பொதியை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, ஷாங்காய் விமான நிலைய ஊழியர்களால் பெறப்பட்ட பொதி பின்னர் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது,

பின்னர், அதை இலங்கைக்குக் கொண்டு வந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இலங்கை விமான நிறுவன ஊழியர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொதி பின்னர் பேக்கேஜ் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது, அதன் பிறகு குறித்த நபர் பொதியை எடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைது செய்யுமாறு பாதுகாப்பு படையினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.