Print this page

கிழக்கு காய்ச்சல் வடக்குக்கும் பரவுகிறது

கிழக்கின் தொல்பொருள் பிரதேசங்களை கண்காணிப்பதைப் போன்றே வடக்கிலும் தொல்பொருள் பிரதேசங்களை கண்காணிக்கும் பொறுப்பை ஜனாதிபதி செயலணிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவின் தலைமையில் இந்த வாரம் கூடும் செயலணிக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நியமித்த விசேட ஜனாதிபதி செயலணி கிழக்கின் தொல்பொருள் பிரதேசங்களை முற்றுமுழுதாக கண்காணித்து அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் கடந்த செயலணிக் கூட்டத்தில் அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் செயலணியிடமே சகல அதிகாரங்களும் ஒப்படைக்கப்படடுள்ளன. இந்நிலையில் தற்போது செயலணியின் பார்வை வடக்கு நோக்கி திரும்பியுள்ளது.

வடக்கில் நாக விகாரை மற்றும் சில பகுதிகளிலும் தொல்பொருள் பிரதேசங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அனுராதபுரம் தூபராம விகாரை தொடக்கம் நாக விகாரை வரையில் சகல பகுதிகளையும் பாதுகாத்து நாட்டின் பாரம்பரியத்தை தக்கவைக்க வேண்டும் எனவும் செயலணியில் அங்கம் வகிக்கும் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.