Print this page

சூர்யாவின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

September 29, 2020

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் சமீப காலமாக பல விஷயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

நடிகர் சூர்யாவின் பழைய அலுவலகம் சென்னை ஆழ்வார் பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்தது. ஆனால் நீண்ட நாட்களுக்கு முன்பே அது காலி செய்யப்பட்டு அடையாறு பகுதிக்கு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது தெரியாமல் மர்மநபர் ஒருவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் வெடித்து சிதற போவதாகவும் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து பொலிஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சூர்யாவின் பழைய அலுவலகம் இருந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் அங்கு அப்படி எதுவுமில்லை. வெறும் புரளி என தெரியவந்துள்ளது.

 

பின்னர் போலீசார் அந்த மர்மநபர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வர் என்ற 28 வயது வாலிபர் என கண்டறியப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த நபர் ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும், நடிகர் விஜய் வீட்டுக்கும், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தி சிறைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.