Print this page

மரணித்தோர் எண்ணிக்கை 21ஆக குறைந்தது

November 02, 2020

கொரோனாவால் மரணித்தார் என இன்று அறிவிக்கப்பட்ட 22ஆவது நபர் தற்கொலை செய்து கொண்டவர் என்பதால், அவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்தார் என கருத முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த மரணத்தை கொரோனா வைரஸ் தொற்று மரணமாக கருதாமல் இருக்க, தொற்று நோய் தடுப்பு பிரிவால் தீரமானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் விஞ்ஞானபிரிவின் விஷேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீரவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் தனது அறிக்கையில் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதான இளைஞர் கடந்த 31ஆம் திகதி உயிரிழந்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருந்தது.

பின்னர், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 22ஆவது மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று அறிவித்திருந்தது.

எனினும் அவரது மரணம் தற்கொலை என்பதால், கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21 என்றே கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.