Print this page

பிரதமரின் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா

November 03, 2020

நாடாளுமன்ற பேரவையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன ஏற்றுக்கொண்டுள்ளதாக என பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப் படையில், 5 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு குறித்த நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும்.

சபாநாயகர், பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரினால் நியமிக்கப்படும் தலா ஒருவர் என இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக ஐவர் குறித்த நாடாளுமன்ற பேரவையில் அங்கம் வகிப்பார்கள்.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்து உறுப்பினர்களை கொண்ட அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக தற்போது நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.