Print this page

5 ஆண்களை கொன்றது கொரோனா: 58 ஆக அதிகரித்தது மரணம்

November 15, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோரின் எண்ணிக்கை 58ஆக இன்று (15) அதிகரித்துள்ளது.

இன்றையதினம் மட்டும் ஐவர், மரணமடைந்துள்ளனர்.

அந்த வகையில், கொழும்பு 13 - ஜிந்துப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஆணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவர், நீண்ட காலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், கொழும்பு 15ஐ சேர்ந்த 39 வயதுடைய ஆணொருவர், கொரோனா நோயாளி என அடையாளம் காணப்பட்ட நிலையில், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தபோது உயிரிழந்துள்ளார். அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொவிட் நியூமோனியாவுக்கு இலக்காகியுள்ளார்.


கொழும்பு 12ஐ சேர்ந்த 88 வயது ஆணொருவர், நெஞ்சு வலி காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் போதே உயிரிழந்துள்ளார். இதய நோயாளியான அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது, கொரோனா தொற்று இருந்துள்ளமை உறுதியாகியுள்ளது.


இதேவேளை, கொழும்பு 8, பொரளையைச் சேர்ந்த 79 வயதான ஆணொருவர், வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்துள்ள நிலையில், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டே உயிரிழந்துள்ளார் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு 13ஐ சேர்ந்த 88 வயதான ஆணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே உயிரிழந்துள்ளார். இதய நோயாளியான அவருக்கு, கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை உறுதியாகியுள்ளது என, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.