Print this page

எல்லை தாண்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்கள் விடுதலை

யாழ்ப்பாணக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்ற கட்டளைக்கு அமைய காரைநகர் கடற்படைத் தளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்படுகின்றனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

இருதினங்களுக்கு முன்னர் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை காரைநகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தி தடுத்துவைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் திடீரென இன்று அவர்களை விடுதலை செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரு நாட்டு தூதரகங்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் தொடராக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

ஏற்கனவே முல்லைத்தீவு, மன்னார் கடற்பரப்புக்களில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 40 பேரை  ஏற்கவே கடற்படையினர் விடுதலை செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.