Print this page

தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகப் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் தலைவர் உபுல் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்

. தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், பிற்போடப்பட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதியை பெறுவதற்கு நாளாந்தம் மக்கள் பொது சுகாதார காரியாலங்களுக்கு பிரவேசிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியமற்ற எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது. அத்துடன், சுகாதார வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு மேலதிகமாகத் திருமணங்கள் மற்றும் மரண வீடுகளில் பொதுமக்கள் ஒன்று கூடினால், அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.