Print this page

ஒருவர் உயிரை பறித்த சந்திவௌி வாகன விபத்து

November 10, 2021

மட்டக்களப்பு – சந்திவௌி பகுதியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் வீதியில் வாழைச்சேனை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று முன்னால் சென்ற சைக்கிளை முந்திச்செல்ல முற்பட்ட போது சைக்கிளுடன் மோதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதியுள்ளது.

இதன்போது சைக்கிள் ஓட்டுநர், முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பாதசாரிகள் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 53 வயதான பாதசாரி ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனமே விபத்துக்கான காரணமென தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்திவௌி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.