Print this page

காணாமல் போன சிறுமியின் தாய் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார்

  மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமி காணாமல் போயுள்ளதாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோரினால் கடந்த 08.12.2021 அன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் சிருமி காணாமல்போய் ஒரு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் சிறுமியின் தாயாரினால் திருகோணமலை ஊடக இல்லத்தில் ஊடக சந்திப்பொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

காணாமல் போயுள்ள தனது பிள்ளையை கண்டுபிடித்துத்தருமாறும் பிள்ளைக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் சிறுமியின் தாயார் தெரிவித்திருந்தார்.

இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில், தரம் 8ல் கல்விகற்று வந்த தனது மகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7ம் திகதி காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் மறுநாள் 8ம் திகதி முறைப்பாடு செய்திருந்ததாகவும் எனினும் ஒரு மாதத்திற்கு மேலாகியும் பொலிசார் இன்னும் கண்டுபிடித்துத் தரவில்லை.

இது தொடர்பாக திருகோணமலையில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்திருக்கின்ற போதிலும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

குறித்த காணாமல் போன சிறுமியை தாம் பல இடங்களிலும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. தினமும் செய்திகளைப் பார்க்கின்றபோது தமக்கு பயமாக இருப்பதனால் சம்பந்தப்பட்ட தரப்பினர் தமது பிள்ளையை தேடிக்கண்டுபிடிக்க உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.