Print this page

அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்த சடலம்.

கற்பிட்டி, கண்டக்குளி கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலமொன்று நேற்று மாலை கரையொதுங்கியுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் சடலமொன்று கிடப்பதாக மீனவர் ஒருவர் கற்பிட்டி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த தகவலில் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த கற்பிட்டி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து அதுதொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இவ்வாறு கரையொதுங்கிய சடலம் அடையாளம் காண முடியாத வகையில் உருக்குலைந்து காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், குறித்த சடலம் வெளிநாட்டவர் ஒருவருடையதாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் எனினும் அதுதொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறு உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய குறித்த சடலம் நீதவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையில் கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.