Print this page

சந்திமால் ஜயசிங்கவிற்கு எதிராக ஆட்டத்தை ஆரம்பித்த புஷ்பிகா டி சில்வா

February 23, 2022

 

அழகுக்கலை கலைஞர் சந்திமால் ஜயசிங்கவுக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக புஷ்பிகா டி சில்வா இன்று (23) தெரியவந்துள்ளது.

புஷ்பிகா டி சில்வா சார்பில் பிலியந்தலை பொலிஸாருக்கு வருகை தந்த சட்டத்தரணி சஜித் பத்திரத்ன இதனைத் தெரிவித்தார்.

சமுதித சமரவிக்ரமவின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸாரால் அழைக்கப்பட்டிருந்த புஷ்பிகா டி சில்வா இன்று (23) ஆஜராக முடியாது எனத் தெரிவிக்க சட்டத்தரணி பத்திரத்ன இன்று (23) பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தார்.

புஷ்பிகா டி சில்வா இன்று (23) சட்டத்தரணி ஒருவருடன் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்திமால் ஜயசிங்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்டத்தரணி ஒருவருடன் விசேட சந்திப்பொன்று நடத்தப்படவுள்ளதாக பத்திரத்ன பிலியந்தலை பொலிஸ் பொறுப்பதிகாரி முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி பிலியந்தலை பொலிஸில் ஆஜராகுமாறு புஷ்பிகா டி சில்வாவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற உலக திருமதி அழகி போட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் புஷ்பிகா டி சில்வாவும், சந்திமால் ஜயசிங்கவும் ஊடகங்களில் ஒருவரையொருவர் குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து, புஷ்பிகா டி சில்வா வைத்திருந்த இலங்கை திருமதி அழகி கிரீடத்தை அகற்றுவதற்கு உலக திருமண அழகி அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி சந்திமால் ஜெயசிங்க நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.